நாகர்கோவில், அக்.7: நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் செண்பகராமன்புதூரை அடுத்துள்ள கண்ணன்புதூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (65) என்பது தெரிய வந்தது. அவருக்கு மனைவி, 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
சண்முகத்திற்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில், திருவனந்தபுரத்திற்கு சிகிச்சைக்கு செல்ல போவதாக கூறிவிட்டு நேற்று அதிகாலை சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். இவ்வாறு வந்தவர் கன்னியாகுமரியில் இருந்து மங்களூரு செல்லும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அந்த மன வருத்தத்தில் சண்முகம் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.