சாலவாக்கம் அருகே தோட்ட நாவல் உள்பட 8 ஊராட்சிகளில் புதிய அரசு கட்டிடங்கள்: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார்
மதுராந்தகம், செப்.26: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலவாக்கம் அருகே உள்ள தோட்ட நாவல் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர். இந்த மனுவினை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
இதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஊராட்சி மன்ற அலுவலகமும் பள்ளி கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்ட அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தமிழ் வேந்தன் அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதே போன்று, பாளேஸ்வரம் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, காட்டாங்குளம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அமராவதி பட்டினம் கிராமத்தில் நியாய விலை கடை, சிறுமையிலூர் ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், ஆனம்பாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்ா்தேக்க தொட்டி, சிறுதாமூர் ஊராட்சி மன்ற கட்டிடம், பொற்பந்தல் ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், பேருந்து நிழற்குடை ஆகிய ஊராட்சிகளில் புதிய கட்டிடங்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவேல், சூர்யா, மாவட்ட கவுன்சிலர் சிவராமன், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுந்தரமூர்த்தி, செல்வக்குமார், மாதவன், கோமளா ஐயப்பன், கோதண்டராமன், கார்த்திகேயன், நிர்வாகிகள் ரவி, பாலமுருகன், கார்த்திக், கோபி, வெங்கட்ராமன், மணிகண்டன், ரத்தினமாலா, கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணி, நதியா கோபி, அழகப்பன், முரளி, பாபு உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.