ெதாடர் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: 71 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியது
காஞ்சிபுரம், அக்.23: வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3, 4 நாட்களாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. மழையின் காரணமாக தாமல் மதகு ஏரி, தாமல் சக்கரவர்த்தி தாங்கள், தைப்பாக்கம் ஏரி, கூரம்சித்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, திருப்புப்குழி ஏரி, திருப்பூலிவனம் ஏரி, இளநகர் ஏரி, அனுமன் தண்டலம் ஏரி, சிருங்கோழி ஏரி, காவனூர் புதுச்சேரி ஏரி, மருத்துவம் பாடி ஏரி, கோவிந்தா வாடி பெரிய ஏரி, மருத்துவம் பாடி ஆகிய 14 சிறிய ஏரிகளும், பெரிய ஏரிகளில் தாமல் மற்றும் உத்திரமேரூர் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இதில், மேற்கூறிய 16 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியது, 44 ஏரிகள் 75 சதவீதமும், 118 ஏரிகள் 50 சதவீதமும், 178 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது. மேலும், மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தாமல் ஏரி 2,307 ஏக்கர் விவசாய நீர் பாசனம் செய்யக்கூடியது. தற்போதய நிலவரப்படி 18 கனஅடி நீர் வந்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல, தென்னேரி 5,858 ஏக்கர் பாசனமும், 18 கன அடி கொள்ளளவும் கொண்டு தற்போதைய நிலவரப்படி 9.50 கனஅடி நீர்வரத்து உள்ளது.
உத்திரமேரூர் ஏரி 5,636 ஏக்கர் பாசனமும், 20 கன அடி கொள்ளவிலும் தற்போதைய நிலவரப்படி 19.50 கன அடி நீர்வரத்து உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி 1,423 ஏக்கர் நீர் பாசனம் செய்யக்கூடியது. 17.70 கன அடி கொள்ளளவு கொண்ட இதில் தற்போதைய நிலவரப்படி 14 கனஅடி நீர்வரத்து உள்ளது. பிள்ளைப்பாக்கம் ஏரி 121.84 ஏக்கர் விவசாய நீர் பாசனமும், கொள்ளளவு 13.10ம் கொண்டது. தற்போதைய நிலவரப்படி 10.60 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மணிமங்கலம் ஏரி 2,079 ஏக்கர் நீர் பாசனம் செய்யக்கூடியது. 18.60 கன அடி கொள்ளளவு கொண்ட இதில் 12 கன அடி நீர்வரத்து உள்ளது. இதில் தாமல், உத்திரமேரூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்யும் மழை காரணமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகளில் தற்போது 4 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 27 ஏரிகள் 75 சதவீதமும், 138 ஏரிகள் 60 சதவீதமும், 243 ஏரிகள் 50 சதவீதமும், 114 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பாலாற்றில் கலக்கப்பட்டு செங்கல்பட்டு பாலாற்று பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது பாலாற்று பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் கிடைத்து, கரும்பு, நெல் விவசாயம் சிறப்பாக நடைபெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.