அரியனூர் பேருந்து நிறுத்தம் அருகே பனங்கிழங்கிற்காக நெடுஞ்சாலையை வெட்டி எடுத்து பனை விதைகள் புதைப்பு: மழையின்போது சாலை உடைவது உறுதி வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் அச்சம்
செய்யூர், செப், 23: ஜமீன் எண்டத்தூரில் இருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரியனூர் பகுதியில் பனங்கிழங்கிற்காக சாலையை வெட்டி எடுத்து பனை விதைகளை புதைத்து வைத்துள்ளனர். இதனால், மழையின்போது, அரிப்பு ஏற்பட்டு சாலை உடைவது உறுதி என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை உடைப்பு, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இருந்து ஜமீன் எண்டத்தூர், கல்பட்டு, அரியனூர், பெரியவெண்மணி, அம்மனூர் வழியாக செய்யூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அரசு பேருந்துகள், கனரக லாரிகள், தொழிற்சாலை வானங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர்.
இந்த சாலை குறுகிய அளவில் இருப்பதால் பெரிய வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒன்றை ஒன்று கடப்பது பெரும் சிக்கல்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில், அரியனூரில் இருந்து கல்பட்டு செல்லும் சாலையில் அரியனூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குடியிருப்புகள் உள்ளன. அதன் எதிரே சாலையின் மண்ணை வெட்டி எடுத்து பனை கிழங்கிற்காக பனை விதைகளை போட்டு புதைத்து வைத்துள்ளனர். தற்போது மழைக்காலம் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டால் தார் சாலை அரித்து செல்லும் நிலை உள்ளது. மேலும், அந்த இடத்தில் சுமார் 3 அடிக்கு பள்ள உள்ளதால் சாைல வெட்டப்பட்ட பகுதியில் வாகனங்கள் ஓரம் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலை சேதம், விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் மண் கொட்டி நிரவி விபத்தை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.