செங்கல்பட்டு, நவ.21: தாம்பரம் மாநகர காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.85.20 லட்சம் மதிப்பிலான 710 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் எரியூட்டும் மையத்தில் தீவைத்து அழிக்கப்பட்டன. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, பள்ளிக்கரணை மது விலக்கு அமலாக்க பிரிவு ஆகிய காவல் நிலையங்களில், கடந்த 2024ம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் 143 குற்ற வழக்குகளில் 710 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சிங்கபெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் என்ற மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் நேற்று கஞ்சா அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.85.20 லட்சம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், தாம்பரம் அமலாக்க பிரிவு உதவி ஆணையர் சதாசிவம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுவாஞ்சேரி ஆய்வாளர் சதீஷ், பள்ளிக்கரணை ஆய்வாளர் தினேஷ், தாம்பரம் ஆய்வாளர் தேவி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

