வேறொரு ஆணுடன் செல்போனில் பேசியதால் காதல் மனைவி கழுத்தறுத்து கொலை: *கணவன் கைது *மதுராந்தகம் அருகே பயங்கரம்
மதுராந்தகம், நவ.19: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் (24). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மதுமிதா (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்போது மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் மதுமிதாவின் நடத்தையில் சரணுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வேறு ஒரு ஆணுடன் மதுமிதா செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண், மனைவி மதுமிதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, கோயிலுக்குச் செல்லலாம் எனக்கூறி மதுமிதாவை அனந்தமங்கலம் கிராம கோயிலுக்கு சரண் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்குள்ள மலைப் பகுதியை பார்த்து வரலாம் என அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்கனவே ரகசியமாக மறைத்து வைத்திருந்த கத்தியால் மதுமிதாவை சரமாரியா வெட்டியும், கழுத்தை அறுத்தும் துடுதுடிக்க படுகொலை செய்தார். மதுமிதா இறந்ததை உறுதி செய்தபின் சரண் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர், அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஒரத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலைக்கு காரணம் பெண்ணின் கணவர் சரண் என்பதை அறிந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அவரை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மதுமிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தி போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கணவன் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


