மதுராந்தகம், அக்.17: மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் புதிய சுரங்கப்பாதை அமைப்பதற்காக, சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் ஜிஎஸ்டி சாலை குறுகியுள்ளதால், அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்கின்றன. இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது, அங்கு சாலை குறுகி இருந்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புகளை இடித்தபடி, அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தின் முன்பக்க பகுதி பலத்த சேதமடைந்து, பேருந்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேருந்தை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
+
Advertisement