காஞ்சிபுரம், அக்.16: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால், 700 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 34.58 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 36 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். நேற்றைய காலை நிலவரப்படி கொள்ளளவு 3040 மில்லியன் கன அடியாக இருந்தது. தற்போது, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை, ராணிப்பேட்டை மாவட்டம், கேசாவரம் அணை மற்றும் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என 2500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், நீர்த்தேக்கத்தின் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரிநீரை, அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் 7 மற்றும் 10 ஆகிய 2 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 700 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகமாகும் நிலையில், கூடுதல் உபரிநீர் படிப்படியாக உயர்த்தி திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement