ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் நெம்மேலியில் கிடப்பில் போடப்பட்ட தூண்டில் வளைவு பணிகள்: வலை பின்னும் கூடம், மீன் இறங்குதளம் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல்
மாமல்லபுரம், செப். 16: மாமல்லபுரம் அருகே நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு, வலை பின்னும் கூடம், மீன் இறங்கு தளம் ஆகியவற்றை அமைப்பதற்காக, ஒன்றிய அரசு உடனடியாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி நெம்மேலி குப்பம் அமைந்துள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், முழுக்க முழுக்க மீன்பிடி தொழிலை நம்பி பிழைப்பு நடத்துகின்றனர்.
இங்கு, கடந்த சில ஆண்டுகளாக கடல் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், திடீர் திடீரென கடலில் ராட்சத அலை எழும்பி பல அடி தூரத்திற்கு குடியிருப்பு பகுதிக்கு அருகே முன்னோக்கி வந்து தாக்கியதில் கடல் அரிப்பு ஏற்பட்டு, அங்குள்ள சிமென்ட் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு கடந்தாண்டு இடிந்து விழுந்தது. நெம்மேலி குப்பத்துக்கு, அருகே உள்ள சூளேரிக்காடு குடியிருப்பு பகுதியையொட்டி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைந்துள்ளது. இந்த, நிலையத்துக்கு கடலில் இருந்து கடல் நீர் எடுத்து வருவதற்காக ராட்சத குழாய்கள் அமைக்க பல அடி தூரத்திற்கு பாறாங்கற்கள் கொட்டப்பட்டது. மேலும், அங்கு கொட்டப்பட்ட கற்களால் அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் கடல் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.
இதனால், அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு சில, நேரங்களில் கரையில் நிறுத்தி வைத்திருக்கும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி உடைந்து கரை ஒதுங்குவது தொடர் கதையாக உள்ளது. இதையடுத்து, நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என அங்குள்ள மீனவ மக்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவுமில்லை, தூண்டி வளைவு அமைக்கப்படும் என மானிய கோரிக்கையில் எந்த அறிவிப்பும் வெளியிடவுமில்லை. தொடர்ந்து, மீனவர்கள் கடலில் இறங்கி போராடுவது, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, அடையாள உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும், அதிமுக அமைச்சர்களோ, எம்பிக்களோ யாரும் நேரில் வந்து மீனவர்களை சந்தித்தது கிடையாது.
கடந்த, 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், நெம்மேலி மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடலரிப்பை தடுக்கும் வகையிலும், மீனவ மக்களை பாதுகாக்கும் வகையில் 2023ம் ஆண்டு மீன்வள மானிய கோரிக்கையில், ரூ.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய தூண்டில் வளைவு, வலை பின்னும் கூடம், மீன் இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது. பின்னர், ஒன்றிய அரசு பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தில் ரூ.25 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கடந்தாண்டு திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினார். நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீமானும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு, வலை பின்னும் கூடம், மீன் இறங்குதளம் அமைப்பதற்காக ஒன்றிய அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யாததால் எந்த பணிகளும் தொடங்கப்படாமல் 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நெம்மேலி மீனவ மக்களை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் நிதி பெற்று போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவு, வலை பின்னும் கூடம் மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.