உத்திரமேரூர், செப்.10: வந்தவாசி அருகே திருமணமான 9 நாளில் காதலனுடன் புதுப்பெண் ‘எஸ்கேப்’ ஆனார். போலீசார் தேடி வந்த நிலையத்தில் காஞ்சிபுரம் காதலனுடன் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவர் பெற்றோர், புதுமாப்பிள்ளையுடன் செல்ல மறுத்ததால் காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்எலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவ(19). இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 29ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு உத்திரமேரூர் சென்றிருந்த புதுமண ஜோடி மறுவீட்டிற்காக கடந்த 6ம் தேதி தென் எலப்பாக்கம் கிராமத்திற்கு வந்தனர்.
அங்கு வீட்டில் இருந்த யுவ மறுநாள் திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் யுவயின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை, வந்தவாசி வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து யுவயை தேடி வந்தனர். விசாரணையில் யுவ, திருமணத்திற்கு முன்பு சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துள்ளார். அப்போது, அதே கம்பெனியில் வேலை செய்த காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் செவிலிமேடு பகுதிக்கு சென்றனர். அங்கு சேஷாத்திரி இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போலீசார், யுவயை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு யுவ, காதலன் சேஷாத்திரி ஆகியோர் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த யுவயின் பெற்றோர், அவரது கணவர் ஆகியோர், யுவயை தங்களுடன் வந்துவிடும்படி வற்புறுத்தினர். ஆனால், யுவ அதை ஏற்காமல் காதலனுடன்தான் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். இந்நிலையில் யுவ மேஜர் என்பதால் அவருடைய முடிவுக்கு போலீசார் ஒப்புதல் தெரிவித்தனர். தொடர்ந்து காதலன் சேஷாத்திரியுடன், யுவ சென்றார். இதனை கண்ட புதுமாப்பிள்ளை, பெண்ணின் பெற்றோர் கதறி அழுதனர்.