Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கம் - வெள்ளி பல்லி சிலைகள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது: இந்து சமய அறநிலையத்துறை தகவல்

காஞ்சிபுரம், நவ.7: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கம்-வெள்ளி பல்லி சிலைகள் தரிசனத்திற்கு இருந்த இடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(3)-ன் கீழ் விளம்புகை செய்யப்பட்ட முதுநிலை கோயிலாகும். இக்கோயில் வரதராஜ பெருமாள் கோயில் என்றும், அத்திவரதர் கோயில் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் நிர்வாகம் செங்கல்பட்டு உதவி ஆணையரால் உதவி ஆணையர்/நிர்வாக அறங்காவலர் என்ற நிலையில் கூடுதல் பொறுப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோயிலில் வெள்ளியிலான சிறிய பல்லியும், தங்க பல்லி என்று அழைக்கப்படும் பித்தளையிலான பெரிய பல்லியும் உள்ள நிலையில், கோயிலில் வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரும் வயதான மற்றும் சிறிய வயது பக்தர்களால் உயரே அமைக்கப்பட்டிருந்த பல்லியை தொட்டு வணங்குவது சிரமமாக இருந்ததன் காரணமாக பக்தர்கள் நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டு சமூக பொறுப்புணர்வு நிதியின் (CSR Fund) மூலம் ரூ.76.90 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்து பணிகள் தொடங்கப்பட இருந்தது. இந்தநிலையில் இப்பணிகளுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவ்வழக்கில் பக்தர்கள் நலன் சார்ந்த பணி என்பதால் கோயிலுக்கு சாதகமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்கப்பல்லி மாயமானதாகவும், கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை கோயில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாகவும் ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் நேற்று முன்தினம் கோயிலின் உதவி ஆணையர்/நிர்வாக அறங்காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேற்படி புகாரின் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அனைத்து பணிகளும் துறையின் அனுமதி பெற்றே நடக்கிறது என்றும், கோயில் தரப்பில் உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டது என்றும் கோயில் உதவி ஆணையர்/நிர்வாக அறங்காவலர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், மண்டல இணை ஆணையரால் கோயில் நேரில் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையிலும், கைவசமுள்ள ஆவணங்களையும் கவனமுடன் பரிசீலனை செய்ததிலும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் சிலை திருட்டு தடுப்பு பிரிவினரிடம் கோயிலில் தங்கபல்லி மாயமானதாகவும், கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை கோயில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்த புகாரும் முற்றிலும் பொய்யானது என தெரிய வந்தது.

தற்காலிக மரப் படிக்கட்டுகள், நகரும் பாலம் முதலான அடிப்படைப் பணிகள் ரூ.76.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கோயிலில் உள்ள வெள்ளியிலான சிறிய பல்லியும், தங்க பல்லி என்று அழைக்கப்படும் பித்தளையிலான பெரிய பல்லியும் ஏற்கனவே பக்தர்களின் தரிசனத்திற்கு இருந்த இடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் சிலை திருட்டு தடுப்பு பிரிவினரிடம் அளிக்கப்பட்ட பொய்யான புகார் மீது சட்டவிதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.