Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.2,388 கோடி மதிப்பீட்டில் பக்கிங்காம் கால்வாயை புதுப்பிக்க திட்டம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சிறப்பு செய்தி

தமிழக அரசு சார்பில் பக்கிங்காம் கால்வாயை ரூ.2,388 கோடியில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதியாக ரூ.20 கோடி கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பக்கிங்காம் கால்வாய் சோழமண்டல கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய் ஆகும். இந்த கால்வாய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. பக்கிங்காம் கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. 1806ம் ஆண்டு சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு, பின்னர் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.

1886ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக எண்ணூரில் இருந்து அடையாறு வரை பக்கிங்காம் கால்வாய் நீட்டிக்கப்பட்டது. பின்னர் அது விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு நீர்வழி வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்பட்டது. உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப்பட்ட இடமாக சென்னை சென்ட்ரல் பகுதி இருந்தது. மேலும் இந்த கால்வாய், மனிதனால் உருவாக்கப்பட்ட உப்பு கால்வாய். ஆந்திராவில் உப்பு கால்வாய் என்றே இன்றும் கூறுகின்றனர். புலிக்காடு, ஸ்ரீஹரிகோட்டா காட்டில் இருந்து, பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்னைக்கு விறகு மற்றும் கரி கொண்டு வரப்பட்டன. இந்த விறகில் தான், சென்னைவாசிகள் சமைத்தனர்.

மரக்காணத்தில் இருந்து காய்கறி மற்றும் வைக்கோல் வந்தன. தற்போதுள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் அருகே, பக்கிங்காம் கால்வாய் மேல் பாலம் உள்ளது. அங்கு தண்ணீர் துறை தொட்டி என்ற பெரிய காய்கறி சந்தை இருந்தது. தற்போதைய சிட்டி சென்டர் உள்ள பகுதியில், விறகு தொட்டி இருந்தது. அங்கு தான் விறகுகள் வந்து இறங்கின. பழங்காலத்தில் வணிக பாதையாகவும், உள்நாட்டு போக்குவர்த்து பாதையாகவும் செயல்பட்ட பக்கிங்காம் கால்வாய் இன்று கழிவு நீர் வெளியேற்றம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கழிவுநீரோடும் கால்வாயாக மாறியுள்ளது.

இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயை மீண்டும் உயிரூட்டும் பேரியக்க முயற்சியாக, தமிழக அரசு 167 கிலோ மீட்டர் நீளத்தில் பரவியுள்ள இந்த நீர்வழியை ரூ.2,388 கோடியில் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. தற்போது இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக ஒன்றிய அரசிடம் கூடுதலாக ரூ.20 கோடி கோரப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி சென்னை போக்குவரத்தில் மின்சார படகு சேவைகள் கொண்ட “வாட்டர் மெட்ரோ” முறைமையை அறிமுகப்படுத்தல், நீர்வழித்துறை வலுப்படுத்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உள்ளிட்டவைகளை மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பக்கிங்காம் கால்வாய் சோழமண்டல கடற்கரை பகுதிகளுக்கு நீர்வழிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட முதன்மையான நீர்வழி ஒன்றாகும். இதன் முழு நீளம் சுமார் 796 கிலோ மீட்டராகும். பழவேற்காடு ஏரி முதல் கூவம் ஆறு கலக்கும் இடம் வரையிலான சுமார் 58 கி.மீ. நீளம் வடக்கு பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறும் அடையாறு ஆறும் கலக்கும் இடத்திற்கு இடையேயான 7.2 கி.மீ. நீளப் பகுதி மத்திய பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு முதல் மரக்காணம் வரையிலான சுமார் 102 கி.மீ. நீளத்திற்கு தெற்கு பக்கிங்காம் கால்வாய் என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் 167 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாயை ரூ.2,388 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கால்வாயை சுமார் 40 மீட்டர் அகலத்திற்கும், மண் மற்றும் சேற்று படலத்தை 1.50 மீட்டர் முதல் 3 மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரி, ஆழப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக ஒன்றிய அரசிடம் இருந்து கூடுதலாக ரூ.20 கோடி நிதியைத் தமிழக அரசு கோரியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீர்வளத்துறை மற்றும் உலகளாவிய நிலைப்படுத்தப்பட்ட அமைப்பு மூலம் எல்லை கண்காணிப்பு, கால்வாய் கரைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முதற்கட்டமாக சேப்பாக்கம் முதல் பசுமை வழிச்சாலை இடையே உள்ள 5 கிலோ மீட்டர் பகுதியை ரூ.31 கோடியில் புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய பகுதியான சிவானந்தா சாலை முதல் ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான 2.9 கிலோ மீட்டர் இடையே பரிசோதனை திட்டமாக எடுக்கப்பட்டுள்ளது. பக்கிங் கால்வாயில் கழிவு நீர் வெளியேற்றப்படும் இடங்களை கண்டறிந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக 3 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் கழிவுகளை சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பக்கிங்காம் கால்வாயுடன் சேர்ந்து அடையாறு மற்றும் கூவம் நதிகளும் அந்த தொடர்புடைய வடிகால்களும் சேர்த்து சென்னை நதிகள் சீரமைப்பு மூலம் ஆறுகள் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு இயக்கம் மற்றும் நீர்வளத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து, கால்வாயின் மறு வடிவமைப்பு, நீர்வழிச்சோதனை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.