Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி தீவிரம்: நகராட்சி அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு, ஆக. 7: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையோரங்களில் இருபுறமும் பிரியாணி கடைகள், ஆட்டுக்கால் சூப் கடைகள், குளிர்பான கடைகள், டிபன் கடைகள் என சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக பள்ளி துவங்கும் நேரங்களிலும், பள்ளிகள் முடியும் நேரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்ப்பட்டது.

மேலும், தினசரி இதுபோன்ற போக்குவரத்து நெரிசலில் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும் உரிய நேரத்தில் வீட்டுக்கு செல்ல முடியாமலும் பரிதவித்தனர். சாலையோர கடைகளுக்கு வருபவர்கள் பைக், கார் என வாகனங்களை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நிறுத்துவதால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. எனவே, சாலையோரக் கடைகளை அகற்றி கட்டுப்படுத்தக்கோரி செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளருக்கு புகார்கள் வந்த வண்ணமும் இருந்தது. அந்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகம் செங்கல்பட்டு நகர போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி டவுன் ப்ளான் அலுவலர் தலைமையில் துப்புரவுப்பணி மேற்ப்பார்வையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேரடியாக ஆக்கிரமிப்பு பகுதிக்கு சென்றனர்.

செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகம், தேவாலயம் பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள ஒருசில கடைகளை அகற்றினர். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் வராத காரணத்தால் சாலையோர கடைகளை அகற்றும் பணியில் முழுமையாக ஈடுபடாத முடியாததால் மீதமுள்ள சாலையோர கடைகளை முழுமையாக அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாள் நிர்ணயம் செய்து அறிவித்த பிறகு சாலையோரம் அமைந்துள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அகற்றப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.