Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று அலையின் சீற்றம் 7 அடி உயரத்துக்கு அதிகரித்து காணப்பட்டது. கடல் முன்னோக்கி வந்ததால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்தனர். மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை மீனவ குப்பங்களில் 2500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி, மீனவர்கள் நாள்தோறும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று மதியம் முதல் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் அலைகள் சுமார் 7 அடி உயரத்துக்கு எழும்பி, கரையை நோக்கி வேகமாக வந்தன. இதனால், கரை பகுதியை தாண்டி, பல மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்து, அங்குள்ள கடற்கரை உணவகங்களை வேகமாக தாக்கியது.

மேலும், 7 அடி உயரத்துக்கு கடல் அலைகளின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலுக்குள் அலைகளின் சீற்றம் அதிகரித்ததால், மாமல்லபுரம் உள்பட சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் பல அடி தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்ததால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்தனர். இதனால், தங்களின் படகு மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான வைத்துள்ளனர். தற்போது, மாமல்லபுரத்தை பொறுத்தவரை வெயில் வாட்டி வதைத்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மேலும், கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இருந்து கோவளம் கடற்கரை வரை கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.