காஞ்சிபுரம், ஜூலை 11: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டத்தில், ரூ.23 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் என நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்தி விட்டு செல்வார்கள். அவ்வாறு, பக்தர்கள் உண்டியலில் செலுத்திவிட்டு செல்லும் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில் ஆய்வாளர் அலமேலு, கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்களும், தன்னார்வலர்களும் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரொக்கமாக 23 லட்சத்து 14 ஆயிரத்து 498 ரூபாயும், 7.520 கிராம் தங்கமும், 178.120 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
+
Advertisement