Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த 9 வேட்பாளர்கள்

காஞ்சிபுரம், ஜூன் 6: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம்தேதி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் க.செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் ராஜசேகர், பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் சார்பில் சந்தோஷ்குமார், பிஎஸ்பி சார்பில் இளையராஜா உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

அதன்படி, காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்பணியாக காலை முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் க.செல்வம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக - 5,86,044, அதிமுக - 3,64,571, பாமக - 1,64,921, நாம் தமிழர் - 1,10,27 என்ற வாக்குகள் பெற்றிருந்தனர்.

இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட க.செல்வம் 2,21,473 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனால், திமுக வேட்பாளர் செல்வம் 2வது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை தவிர பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார், பிஎஸ்பி வேட்பாளர் இளையராஜா உள்ளிட்ட 6 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.