Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பு கஞ்சா அழிப்பு

தாம்பரம்: காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 833.5 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் எரியூட்டு மையத்தில் எரித்து அழிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையங்களில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 55 குற்ற வழக்குகளில் 833.5 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இவற்றை, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் நேற்று எரித்து அழிக்கும் பணி நடைபெற்றது.  தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின்பேரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் கஞ்சா அழிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.1.25 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையர் சத்தியசீலன், ஆய்வாளர்கள் சதீஷ், தினேஷ், ஸ்ரீதேவி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.