திருவள்ளூர்: அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தீபாவளி கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு வெடித்தால் ஆபத்துகள் அதிகளவில் ஏற்படும். அதனால் குழந்தைகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கடந்த ஆண்டு, அரவிந்த் கண் மருத்துவமனைகளில் மட்டுமே கண் காயங்களுடன் 456 நோயாளிகள் கண் தொடர்பான காயங்களுக்கு பதிவு செய்தனர். இதில் 45 பேர் குறிப்பிடத்தக்க பார்வை இழப்பை சந்தித்துள்ளனர். இந்த எண்ணிக்கை பண்டிகை காலங்களில் கண் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
எனவே தீபாவளியின் போது கண்களை பாதுகாக்க சில பாதுகாப்பு குறிப்புகள்: அரவிந்த் கண் மருத்துவமனைகளில் தீபாவளி அன்று பதிவாகும் 60 சதவீதம் நோயாளிகள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எனவே, குழந்தைகள் பட்டாசுகளைக் வெடிக்கும்போது அவர்களை பெரியவர்கள் முழுமையாக கண்காணிக்க வேண்டும். தீப்பொறிகள் அல்லது வெடிப்புகளில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க பட்டாசுகளை கொளுத்தும்போது பாதுகாப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும்.
பட்டாசுகள் கொளுத்தப்படும்போது எப்போதும் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பட்டாசு சரியாகப் பற்றவில்லை என்றால், அதை மீண்டும் கொளுத்த முயற்சிக்காதீர்கள். காத்திருந்து பின்னர் அதை பாதுகாப்பாக அணைக்கவும். கண்ணில் காயம் ஏற்பட்டால், கண்களைத் தேய்ப்பதையோ அல்லது கழுவுவதையோ தவிர்த்து, உடனடியாக கண் மருத்துவமனையை அணுகி மருத்துவ உதவியை நாட வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளை மனதில் வைத்துக்கொண்டு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.