Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

சத்தியமங்கலம், ஆக. 21: பவானிசாகர் அருகே உள்ள புங்கார் ஊராட்சிக்கு உட்பட்ட புங்கார் மற்றும் பெரியார் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு பவானிசாகரில் உள்ள பவானி ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பைப் லைன் உடைப்பால் கடந்த 4 நாட்களாக அப்பகுதிக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பவானிசாகர்- பண்ணாரி சாலையில் புங்கார் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.