ஈரோடு, ஆக. 7: ஈரோடு தெற்கு போலீசார், சென்னிமலை ரோட்டில் உள்ள ரயில்வே கூட்ஷெட் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து சோதனையிட்டனர். அதில் அவரிடம், அரசால் தடை செய்யப்பட்ட 1.100 கிலோ கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் ஈரோடு, மரப்பாலம் பகுதி, ஆலமரத்து தெருவை சேர்ந்த மனோ (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த ரூ.33 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல, ஈரோடு வடக்கு போலீசார், கனிராவுத்தர்குளம், காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெரிய சேமூர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சூர்யா (25) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,500 மதிப்பிலான 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.