ஈரோடு, டிச.11: ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள 3 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில்மலைப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகம் உள்ள 3 கிராம ஊராட்சிகளை பிரித்து புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பர்கூர் ஊராட்சி 5 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி பர்கூர், குட்டையூர், தாமரைக்கரை, தேவர்மலை, கோவில்நத்தம் ஆகிய 5 புதிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள குத்தியாலத்தூர் ஊராட்சியும் 5ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடம்பூர், பவளக்குட்டை, இருட்டிபாளையம், கரளயம், அரிகியம் ஆகிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தாளவாடி ஊராட்சி ஒன்றியம் தாளவாடி ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தாளவாடி, தொட்டகாஜனூர் ஆகிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குத்தியாலத்தூர் ஊராட்சியில் 48 குக்கிராமங்களும், பர்கூர் ஊராட்சியில் 34 குக்கிராமங்களும், தாளவாடி ஊராட்சியில் 12 குக்கிராமங்களும் இருந்தன. இந்த 3 ஊராட்சிகளிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்னர். இந்த ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம் மலைப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு திட்டங்களை எளிதில் பெற முடியும் என மலை கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது இந்த ஊராட்சிகளுக்கு தனித்தனியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஊராட்சிகளுக்கு தனித்தனியாக ஊராட்சி அலுவலக கட்டவும், ஊராட்சி செயலர்கள் நியமிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


