ஈரோடு, டிச.11: பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புகையிலை பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட, புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்ற தலைப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு அருகே, 100 மீட்டர் தொலைவில் சாலையில் ‘டுபாக்கோ ப்ரீ ஜோன்’ அதாவது புகையிலை இல்லாத பகுதி என வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பெயிண்ட் மூலம் விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரி பகுதியில் சாலையின் நடுவே நேற்று விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது.


