ஈரோடு, ஆக. 5: வேளாண் கருவிகளை 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செரிமானத் தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை பெருக்கவும், ஈரோடு மாவட்டத்தில் 200 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. குறைந்தது 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் மின்சார வசதியுடன், தீவனம் பயிரிட்டுள்ள, இரண்டு பசு அல்லது எருமைகளுக்கு உரிமையாளராக இருக்கும் சிறுகுறு விவசாயிகள் இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பெண் விவசாயிகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இதர தகுதிகள் இருப்பின் இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அரசின் இதுபோன்ற திட்டத்தில் பயனடைந்தவர்களாக இருத்தல் கூடாது. புல் நறுக்கும் கருவியின் விலையில் 50 சதவீத தொகையினை தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விருப்பமுள்ளவர்கள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், சிறு குறு விவசாயி சான்றிதழுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.