பழநி, செப். 26: பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, வரிப்புலி, காட்டு மாடு, காட்டுப்பன்றி, கேளையாடு, கரடி உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. தவிர விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவு உள்ளன. இதனால் பழநி வனச்சரகத்திற்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழா காலங்களில் சம்பிரதாயம் என கூறி சிலர் பாரி வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். இதனை தடுக்க வனத்துறையினர் தற்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பாரி வேட்டை என்ற பெயரில் வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு வன உயிரின பாதுகாப்பு சட்டம் பிரிவு 51ன் படி 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்திற்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படும். ஆகவே வன உயிரினங்களை பாதுகாத்து, வனத்தை பெருக்கி வனத்துறையுடன் இணைந்து பொதுமக்கள் அனைவரும் செயல்பட முன்வர வேண்டும். இவ்வாறு கூறினர்.