திண்டுக்கல், அக். 18: வத்தலக்குண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). பால் வியாபாரி. இவர் கடந்த அக்.12ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இவரது மாமனார் சந்திரன், மாமனார் அன்புச்செல்வி, மைத்துனன் ரிவின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலையான ராமச்சந்திரன் மனைவி ஆர்த்தி பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தார்.
அம்மனுவில், ‘எனது கணவர் கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டு இருப்பதாக சந்தேகம் உள்ளது. தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் எனக்கும், எனது கணவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனது கணவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
 
  
  
  
   
