திண்டுக்கல், அக். 16: திண்டுக்கல்லில் ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை வந்தது.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் ரயில்களில் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் எஸ்ஐ மணிகண்டன், ஏட்டுக்கள் மதன்ராஜ், வெங்கடேஸ்வரன், விவேக்ராஜ், தனிப்பிரிவு மணிவண்ணன் ஆகியோர் அந்த ரயிலில் ஏறி முன்பதிவு இல்லாத பெட்டியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பெட்டியின் இருக்கைக்கு கீழ் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இதனை கடத்தி வந்தது யார், எங்கிருந்து கடத்தி வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.