பழநி, செப். 11: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உரல்பட்டியை சேர்ந்த சேதுபதி மனைவி பொன்மலர் (39). இவர் நேற்று முன்தினம் தனது உறவினரான வெள்ளியங்கிரியுடன் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக டூவீலரில் பழநிக்கு வந்து கொண்டிருந்தார். பழநி- கொழுமம் சாலை அ.கலையம்புத்தூர் பகுதியில் ஒரு வேகத்தடையில் ஏறிய போது திடீரென நிலை தடுமாறிய டூவீலர், எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது.
இதில் டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு பொன்மலர், வெள்ளியங்கிரி படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்மலர் உயிரிழந்தார். வெள்ளியங்கிரி சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.