பழநி, நவ.6: திறந்தவெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படுமென பழநி நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திறந்தவெளி கழிப்பிடமாக மாறுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனிநபர் கழிப்பறை அமைக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளன. கோயில் நகரான பழநியை சுகாதாரமான நகராக மாற்ற திறந்தவெளியில் மலம் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
