பழநி, ஜூலை 31: பழநி அருகே ஆயக்குடி பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆயக்குடி காவல் நிலையம், பழைய ஆயக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயக்குடி கொய்யா மார்க்கெட், புது ஆயக்குடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பகுதிகளை கலெக்டர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் சாலையை அகலப்படுத்துவது, வேகத்தடைகள் அமைப்பது, வளைவு பகுதிகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைப்பது, இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மின் விளக்குகள், ஒளிரும் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவற்றை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பழநி கோட்டாட்சியர் கண்ணன், டிஎஸ்பி தனஞ்ஜெயன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதர், உதவி பொறியாளர் (நெடுஞ்சாலை துறை) கலாவதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர் .