திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் இலக்கிய களம் சார்பில் 12வது புத்தக திருவிழா ஆக.28ம் தேதி துவங்கி செப்.7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு புத்தக திருவிழா இடநெருக்கடி இன்றி, வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அனைவரும் எவ்வித சிரமமுமின்றி வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தக திருவிழா குறித்து பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் அனைவரும் புத்தக திருவிழாவில் பங்கேற்க செய்யவும், மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பஸ் வசதிகள் ஏற்படுத்தவும், அனைத்து பள்ளிகளிலும் புத்தக திருவிழா தொடர்பாக கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை புத்தக கண்காட்சியில் பங்கேற்க செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சிறுதானிய கடைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புத்தக திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுவதை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புத்தக திருவிழா தொடர்பான இலச்சினையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனீஸ் சேகர், கலெக்டர் சரவணன் வெளியிட்டனர்.