பழநி, செப்.30: கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்லும் பழநி-கொடைக்கானல் மலைச்சாலை இயற்கை எழில் சூழ்ந்ததாகும். இங்கு சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
இந்நிலையில் பழநி- கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், மீதமாகும் அல்லது அழுகிய உணவு பண்டலங்களை சாலைகளில் விலங்கினங்களுக்கு வைத்து செல்கின்றனர். இதனை உண்ணும் வனவிலங்குகளுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வனத்துறையினர் சாலையோரங்களில் உணவுகளை வைக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கொடைக்கானல் மலைச்சாலையோரங்களில் உணவு பொருட்கள் வைப்பவர்கள் மீது 1972 வன சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலைச்சாலைகளில் அமர்ந்து சிலர் மது அருந்துவது, புகை பிடிப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்தும் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளால் வன உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.