நிலக்கோட்டை, செப்.30: நிலக்கோட்ட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். மேலும் காலையில் மார்க்கெட்டுகளுக்கு செல்வோரும், சுமைகளின் மீது அமர்ந்தபடி பயணிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, சரக்கு வாகனங்களில் பயணம் செய்வோர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘வாடகை குறைவு, அதிக எண்ணிக்கையில் பயணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் சரக்கு வாகனங்களில் கிராமமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். சரக்கு வாகனத்தில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு கிடைக்காது என்பதை அறியாமல் உள்ளனர். இதனால் அரசுக்கு வரி செலுத்தி வாடகை வாகனங்களை இயக்கும் வேன் உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.