திண்டுக்கல், நவ. 28: கொடைக்கானல் வட்டம், பெருமாள்மலையில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி தலைமை வகித்தார்.
பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இம்முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் முடித்த சுமார் 150 பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். படித்த பழங்குடியினர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களில் தங்கும் மற்றும் உணவு வசதியுடன் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு பழங்குடியினர் இளைஞர்களுக்கு இந்திய தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தவுள்ளனர்.
இதன்மூலம் பழங்குடியினர் இளைஞர்களின் பொருளாதாரம் தன்னிறைவு அடைந்து இவர்கள் மற்ற பழங்குடியின இளைஞர்களுக்கு முன் மாதிரியாகவும் திகழ வழிவகை ஏற்படுத்தப்பட்டது. இதில் டாக்டர் சைமன், ராஜாமுகமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

