திண்டுக்கல், அக்.28: இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு கல் உடைக்கும் மற்றும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர், கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், வேடசந்தூர் தாலுகா சின்ன கூவக்காபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. அதில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டு மனை பட்டா இல்லாமல் மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானவர்கள் கல் உடைத்தல், லோடுமேன் போன்ற கூலி வேலை செய்கின்றனர். இவர்கள் குடியிருந்து வரும் இடங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் கலெக்டர் இது குறித்து விசாரணை செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
