திண்டுக்கல், டிச.11: திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கை பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படுகிறது.
முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (நகல்) கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், மஞ்சப்பை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை ஜன.15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


