ரெட்டியார்சத்திரம், நவ.11: ஒட்டன்சத்திரம் செம்பட்டி சாலையில், குவிந்து கிடக்கும் மணலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம்-செம்பட்டி பிரதான சாலையில் ஆண்டரசன்பட்டி, புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் சாலையின் ஓரங்களில் இருபுறமும் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக நடந்து செல்லும் விதமாக பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை ஓரங்கள் மற்றும் ஏராளமான இடங்களில் சாலை ஓரத்தில் மணல் குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் சாலையின் மையப்பகுதியிலேயே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாலை ஓரங்களில் சுமார் ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் வரை அதிகமாக மணல் பரப்பு ஆக்கிரமித்துள்ளதால் மோட்டார் சைக்கிள் செல்ல வழி இல்லாத நிலை இருந்து வருகிறது.
சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி விபத்துக்களை சந்திக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது மணல் தூள்கள், தூசிகள் காற்றில் பறந்து பின்னால் டூவீலர்களில் வருபவர்கள் மீது விழுவதால் நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது.இதே போல் இரவு நேரங்களில் வாகனங்களில் வெளிச்சமின்மை காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள மணல் குவியலை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


