அரூர், செப்.30: அரூர் பகுதியில் கம்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. மகசூலை பறவைகளிடமிருந்து பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பொன்னேரி, ஈட்டியம்பட்டி, முத்தானூர் உள்ளிட்ட பகுதிகளி,ல் கம்பு பயிரிடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் விளைச்சலை தரும் பயிராகும். தற்போது மக்களிடையே ஏற்பட்ட சிறுதானிய உணவு விழிப்புணர்வு காரணமாக கம்பு, சோளம், ராகி, தினை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு வரவேற்பு நன்றாகவே உள்ளது. இதனால் கம்பு விலையும் கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விளைந்த கதிர்களை, பறவைகளிடமிருந்து காப்பாற்றுவது விவசாயிகளின் மிக பெரிய சவாலாக உள்ளது. வயலை சுற்றி புடவைகளை கட்டி விடுதல், கம்பு கதிர்களில் பிளாஸ்டிக் கவர்கள் சுற்றிவிடுதல், தட்டு, டிரம் உள்ளிட்டவைகளை வைத்து சத்தம் எழுப்புதல் உள்ளிட்ட யுத்திகளை பின்பற்றி வருகின்றனர். ஈட்டியம்பட்டியில் விவசாயி கூறுகையில், கம்பு கதிரை சாப்பிட குருவி, மைனா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் வருகின்றது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இவைகளின் வருகை அதிகமாக இருப்பதால், பகல் முழுவதும் தட்டு போன்ற பொருட்களை வைத்து சத்தம் எழுப்பி விரட்டி விடுகிறோம் என்றார்.
+
Advertisement