அரூர், நவ.12: தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில், வனப்பகுதிகளில் வேட்டைத்தடுப்பு, ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று காலை, மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வனவர்கள் விவேகானந்தன், பவித்ரா, ஐயப்பன், வனக்காப்பாளர்கள் ரமேஷ்குமார், இளவரசன், வனக்காவலர் லட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், மொரப்பூர் வனச்சரகம், வாதாப்பட்டி பிரிவு, செல்லம்பட்டி பீட் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பொய்யப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் (62), அவரது மகன் சந்திரகாந்த்(42) ஆகிய இருவரும், தங்களது பட்டா நிலத்தில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்த்து, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை செய்தனர். அதில், மின்சாரம் பாய்ச்சி வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து மின்சாரம் பாய்க்க பயன்படுத்திய ஒயர், கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவர் மீதும் வனஉயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன் ஆஜர்படுத்தினர். அவர் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக, ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.
