அரூர், ஆக.1: அரூர், நரிப்பள்ளி நிலையங்களில் வரத்து சரிவால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பு(2024-2025) சம்பா பருவத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், அரூர் மற்றும் நரிப்பள்ளியில் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்விரு கொள்முதல் நிலையங்களிலும் 659 விவசாயிகளிடமிருந்து, 2,533 டன் நெல் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சம்பா நெல் அறுவடை முடிந்துள்ளது. இதனால், நெல் வரத்து குறைந்துள்ளது. எனவே, அரூர் மற்றும் நரிப்பள்ளியில் இயங்கி வரும் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யும் பணிகள் ஜூலை 31ம் தேதி முதல் முடிவுக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் இருப்பின், நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement