தர்மபுரி, செப்.2: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, மாணவர் தொழிற்கல்வி பயில முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சதீஸ் வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 496 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், நல்லம்பள்ளி தாலுகா, பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ஆத்திஷ்குமார் என்பவருக்கு, தொழிற்கல்வி பயில முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், தனித்துணை கலெக்டர் சுப்பிரமணியன், மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, செம்மலை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.