உளுந்தூர்பேட்டை, ஆக. 29: உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் நடந்த மாந்திரீக பூஜை வழிபாட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னை சத்யா பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய சந்திப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் மண்டை ஓடு மற்றும் துணியால் ஆன பொம்மை வைத்து மாந்திரீக பூஜை வழிபாடு செய்துள்ளனர். நேற்று காலை இந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்துவிட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மண்டை ஓடு மற்றும் மாந்திரீக பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சந்திப்பு பகுதியில் மண்டை ஓடு வைத்து அதில் உருவத்துடன் கூடிய துணியால் ஆன பொம்மை செய்து அந்த மண்டை ஓட்டிற்கு மாலை அணிவித்தும், இரண்டு புறங்களில் பூசணிக்காயை அறுத்து வைத்தும், வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி உள்ளனர். மேலும் அந்த மண்டை ஓடு மற்றும் பொம்மையை சுற்றி மஞ்சள், குங்குமம் கொட்டி கிடந்தது.
+
Advertisement