புதுச்சேரி, செப். 27: தாயை கொன்ற அக்கா கணவரை கல்லால் சரமாரி தாக்கிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தரையர்பாளையம் காந்திதிருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (48). இவர், கடந்த 2024ல் மனைவி கலையரசியின் சித்தி ஞானாம்பாளை கொலை செய்து, சிறையில் இருந்து வெளியே வந்தவர். நேற்று முன்தினம் காலை அவர், தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஞானாம்பாளின் மகனும், கலையரசியின் தம்பியுமான சண்முகம் (எ) சங்கர், ஏன் இங்கு வந்தாய்? எனக்கேட்டு தரக்குறைவாக திட்டி கல்லால் பலமாக தலையில் அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் வெற்றிவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெற்றிவேலுவின் மனைவி கலையரசி (40), மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சண்முகம் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement