Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

திண்டிவனம், செப். 22: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் நேற்று முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில் எம்எல்ஏ அருளுக்கு புதிய பதவி அளித்தும், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் இருவரை நீக்கியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும், மாம்பழம் சின்னம் தங்களுக்குகே சொந்தம் எனவும் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த அருள் எம்எல்ஏ, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு தெரியாமலேயே முகவரியை திருட்டுத்தனமாக மாற்றி உள்ளனர்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் எந்த இடத்திலும் அன்புமணி கட்சி தலைவர் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை என கூறியிருந்தார். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி டிசம்பர் 17ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்தார்.

இது போன்ற சூழ்நிலையில் கட்சியினருடன் அடுத்தக்கட்ட செயல்பாடுகள், கூட்டணி நிலைப்பாடு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த முடிவு செய்த ராமதாஸ் நாளை (23ம் தேதி) தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார். தொடர்ந்து, 24ம் தேதி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள்

கூட்டமும் நடக்கிறது.

இக்கூட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளான கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, அருள் எம்எல்ஏ., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் சங்க கோபு, பரந்தாமன் ஆகியோருடன் அவர் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து சேலம் அருள் எம்எல்ஏவுக்கு மாநில இணை பொதுச்செயலாளர் மட்டுமின்றி, பாமகவின் தலைமை செய்தி தொடர்பாளராகவும் கூடுதல் பதவி வழங்கி நியமனம் செய்தார். இதனை தொடர்ந்து வன்னியர் சங்க மாநில செயலாளராக பதவி வகித்த வைத்தி, முன்னாள் எம்எல்ஏ கார்த்தி ஆகியோர் தொடர்ந்து ராமதாசுக்கு எதிராகவும், வன்னியர் சங்கத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதாக ராமதாசின் ஒப்புதலோடு இருவரையும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாகவும்,

வன்னியர் சங்க நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி அறிவிப்பை வெளியிட்டார். பாமகவில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களால் பரபரப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேலும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.