மரக்காணம், நவ. 12: மரக்காணம் அருகே கூனிமேடு திப்பு சுல்தான் தெருவை சேர்ந்தவர் அப்துல் சுக்குறு(51). இவரது மனைவி ஜெயின்பி(47). இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு புதுவை மாநிலத்திற்கு சென்றுள்ளனர். மீண்டும் அன்று மாலை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று வழக்கமாக அவர்கள் வைக்கும் நகை, பணத்தை பார்த்துள்ளனர். அப்போது 3 சவரன் தங்கச் செயின், மூக்குத்தி ஒரு கிராம், 500 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.5000 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து ஜெயின்பி மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன பொருட்கள் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளை உடைத்து நகை, பணம் திருடுபோவது மற்றும் வீட்டின் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2 சக்கர வாகனங்களை திருடுபோவது தொடர் கதை ஆகிவிட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க மரக்காணம் போலீசார் மாலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
