கடலூர், நவ. 12: நெல்லிக்குப்பம் அருகே தேர்தல் முன் விரோதத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன் மகன் சுபாஷ்(34). கீழ் அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தலில் சுபாஷ் வெற்றி பெற்றதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் தாமோதரன்(60), ராதாகிருஷ்ணன் மகன் ராஜதுரை(30), தங்கவேலு மகன் கவியரசன்(26), பக்கிரிசாமி மகன் சுபகணேஷ்(29), தணிகாசலம் மகன் தமிழ்வாணன்(28), தாமோதரன் மகன் வில்பார்(29), ஆறுமுகம் மகன் மணிமாறன்(41), சாமிக்கண்ணு மகன் தர்மராஜ்(52), முருகன் மகன் தினேஷ்குமார்(27), சுப்பிரமணியன் மகன் பக்கிரிசாமி(47), ஆறுமுகம் மகன் மணிவண்ணன்(47), சுப்பிரமணியன் மகன் வெங்கடாபதி(39) ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சரஸ்வதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
குற்றம்சாட்டப்பட்ட வெங்கடாபதி இறந்த நிலையில், மற்ற அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில், 10வது குற்றவாளியான பக்கிரிசாமி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தாமோதரன், ராஜதுரை, கவியரசன், சுபகணேஷ், தமிழ்வாணன், வில்பார், மணிமாறன், தர்மராஜ், தினேஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 10 பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதை கேட்டு தண்டனை பெற்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர். இதையடுத்து தண்டனை பெற்ற அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
