விழுப்புரத்தில் பல்வேறு அரசுத்துறை சார்பில் 9,230 பயனாளிகளுக்கு ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்
விழுப்புரம், டிச. 7: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 9,230 பயனாளிகளுக்கு ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார். விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வரவேற்றார். ரவிக்குமார் எம்.பி., எஸ்.பி. சரவணன், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பத்மஜா முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏக்கள் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சர்பில் 647 பேருக்கு ரூ.10.31 கோடியிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 1,920 பேருக்கு ரூ.78.51 கோடியிலும், தமிழக ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் 61 பேருக்கு ரூ.31.90 லட்சத்திலும், தாட்கோ சார்பில் 172 பேருக்கு ரூ.3.85 கோடியிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 38 பேருக்கு ரூ.11.49 கோடியிலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 70 பேருக்கு ரூ.4 லட்சத்திலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 50 பேருக்கு ரூ.24 லட்சத்திலும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 40 பேருக்கு ரூ.40 லட்சத்தில் மூன்று சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், தொழிலாளர் நலத்துறை சார்பில் 2,426 பேருக்கு ரூ.10 லட்சத்திலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 217 பேருக்கு ரூ.3.15 கோடியிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 50 பேருக்கு ரூ.2.36 லட்சத்தில் என மொத்தம் 9,230 பயனாளிகளுக்கு ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நகரமன்ற, பேரூராட்சி, ஒன்றிய சேர்மன்கள், துணை சேர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் நன்றி கூறினார்.


