புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத் (எ) சரத்ராஜ் (26). இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 கொலை, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதற்கிடையே கடந்த 2021ல் புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அந்த சிறுமி கர்ப்பமானார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, அவர் சிறுமி என்பதால் சரத் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே சிறுமிக்கு குழந்தை பிறந்து, தற்போது ஒரு வயது ஆகிறது. சரத், சிறுமியை திருமணம் செய்த பிறகு, மாமியார் வீட்டிலேயே சரத் தங்கியிருந்தார். இதனிடையே சரத் மீதுள்ள அனைத்து வழக்குகளும் அவருக்கு எதிராகவே இருந்தன.
மேலும், போக்சோ வழக்கிலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அதிகமாக மது குடிக்க தொடங்கியுள்ளார்.நேற்று முன்தினம் அதிகாலை அவரது ஒரு வயது குழந்தை அழுதுள்ளது. போதையில் இருந்த சரத் குழந்தையை அடித்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சரத், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த எலிபேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நேற்று மாலை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில, நேற்று அதிகாலை அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
