Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வராயன்மலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்

கல்வராயன்மலை, ஜூலை 29: கல்வராயன்மலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்பாச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (45), விவசாயி. இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினசரி கல்வராயன்மலையில் உள்ள விளாம்பட்டி வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருவது வழக்கம். அதேபோல் நேற்று காலை வழக்கம்போல் விளாம்பட்டி வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கரடி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த ராஜமாணிக்கம் கரடிக்கு தெரியாமல் அங்கிருந்து நகர்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த கரடி அவரை கடுமையாக தாக்கியதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் வனப்பகுதியில் கிடந்த அவரை அவ்வழியாக சென்ற செல்வம் என்பவர் பார்த்துவிட்டு உடனடியாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் ராஜமாணிக்கத்தை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு 80 தையல்கள் போடப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறை மற்றும் கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் கல்வராயன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.