அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பரபரப்பு டீ குடிப்பதற்காக பேருந்தை வழியில் நிறுத்திய கண்டக்டர், டிரைவர் இடமாற்றம்
விழுப்புரம், ஆக.4: டீ குடிக்க பேருந்தை வழியில் நிறுத்திய குற்றச்சாட்டிற்காக இடம் மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து அரசு பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனையில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் பகுதியில் இருந்து குண்டலபுலியூருக்கு அரசு நகரப் பேருந்து இயங்கி வருகிறது. இதில் வழுதரெட்டியை சேர்ந்த குபேரன்(50) ஓட்டுநராகவும் ஆர்.பி. நகரைச் சேர்ந்த பாலசுந்தரம்(45) நடத்துநராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்திலிருந்து செல்லும்போது அசோகபுரி என்ற இடத்தில் வழியில் பேருந்தை நிறுத்திவிட்டு டீ குடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி பணிமனை மேலாளர் இவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சங்கராபுரத்திற்கு இடமாற்றம் செய்ததாக கூறப்பட்டது. இதனை கண்டித்து நடத்துநர் பாலசுந்தரம், ஓட்டுநர் குபேரன் ஆகிய இருவரும் நேற்று விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள உயர் கோபுரத்தின் மீது ஏறி உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்களும் விரைந்து வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதாகவும், இடமாறுதல் உத்தரவு உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்யப்படுவதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.