சூலூர், ஆக.2: சோமனூர் பகுதியில் ஆடு, கோழி திருட முயன்ற 4 பேரை பொதுமக்கள் துரத்தினர். இதில் ஒருவர் பிடிபட்டார். மேலும் 3 தப்பி ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சோமனூர், சேடபாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் சுப்பிரமணியம். தனது வீட்டின் அருகே சாலை அமைத்து ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென ஆடுகளின் சத்தம் அதிகமாக கேட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சுப்பிரமணியம் வெளியே வந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த 4 நபர்கள் அவரது சாலைக்குள் நுழைந்து ஆடுகளைத் திருட முயற்சிப்பது தெரியவந்தது. இந்நிலையில் சுப்பிரமணியம் வருவதை பார்த்ததும், 4 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதில், ஒருவர் இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
பிடிபட்ட அவரை விசாரித்ததில், அவரது பெயர் தீபக் என தெரியவந்தது. மேலும் 3 பேர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் காயமடைந்த தீபக், அப்பகுதியினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.